திருவலம் : வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே சந்திப்பில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் அன்றாடம் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம், மங்களூரிலிருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி அரக்கோணம் வழியாக ஐதராபாத் செல்லும் கச்சிகுடா ரயில் சந்திப்பு சென்று அங்கிருந்து சென்னை வந்து மதுரை செல்லும் கச்சிகுடா சூப்பர் பாஸ்ட் ரயில் நேற்று காலை 9.30 மணியளவில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு காட்பாடி- சென்னை மார்க்கத்தில் ெசன்று கொண்டிருந்தது. அப்போது திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் உள்ள திருவலம் ரயில் நிலையத்தை காலை 10 மணியளவில் கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது, திருவலம் ரயில் நிலையம்- திருவலம் பொன்னையாற்று ரயில்வே மேம்பாலத்திற்கு இடையே ரயில்வே பாதையில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.இதில் ரயிலின் வேகம் குறைந்து ரயில்வே பாதை அருகே இருந்த புதர்கள் மீது அறுந்த மின்கம்பி விழுந்து தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதில் புதரில் ஏற்பட்ட தீ மேலும் எரியாமல் தானாகவே அணைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் அங்கேயே காத்திருந்து விட்டு திரும்ப சென்றனர். அப்போது ரயில் ஓட்டுனர் ரயிலை அங்கேயே நிறுத்தி விட்டு காட்பாடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே ஓஎச் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பினை துண்டித்து அறுந்த மின்கம்பியை சுமார் 2 மணி நேரத்தில் சீரமைத்தனர். இதையடுத்து கச்சிகுடா சூப்பர் பாஸ்ட் ரயில் பகல் 12.55 மணியளவில் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனையடுத்து காட்பாடி- சென்னை மார்கத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பிருந்தாவன், லால்பாக், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், காட்பாடி- அரக்கோணம் போன்ற ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.தொடர்ந்து அறுந்த மின்கம்பியை இணைத்து சீரமைக்கும் பணியில் காட்பாடி ரயில்வே ஓஎச் துறைப்பணியாளர்கள் மதியம் 3 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் சீரமைத்தனர். இதனையடுத்து ரயில்கள் அப்பகுதியில் வழக்கம்போல் சென்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது….