மேலூர், ஆக. 31: மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலத்தை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அது முதல் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த பல்லுயிர் தலத்தை பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன் புகைப்பட நிபுணர்கள் இங்குள்ள பல்லுயிர்களை படம் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக கூடுதல் தலைமை செயலாளர் (வனத்துறை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு) சுப்ரியா சாகு, அரிட்டாபட்டி பல்லுயிர் தலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பசுமை அமைப்பு அதிகாரி தீபக், மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி, வனத்துறையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். அரிட்டாபட்டியில் உள்ள மலைகளுக்குள் சென்று, அங்குள்ள பல்லுயிர் வளங்களை தலைமை செயலாளர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கிராம மக்களின் கோரிக்கைகளை நேரடியாக தலைமை செயலாளர் கேட்டறிந்தார். இவர்களுக்கு அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன் வழிகாட்டினார். இவருடன் பல்லுயிர் தல பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பாரதிதாசன், கார்த்திக் உள்ளிட்ேடார் உடனிருந்தனர்.