மேலூர், அக். 27: மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலத்தை, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி, தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அரிட்டாபட்டிக்கு வருகை வந்தார்.
அரிட்டாபட்டியில் உள்ள குடைவறை கோயில், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து, மகாவீரர் சிலைகளை பார்வையிட்ட அமைச்சர் பின் பல்லுயிர் மலைகளில் நடைபயணம் மேற்கொண்டார். வனத் துறை அதிகாரிகளிடம் அவ்விடம் குறித்து கேட்டறிந்தார். உடன் தமிழக வனத்துறை தலைவர் சுப்ரத் மொஹபத்ரா, தலைமை வன பாதுகாவலர் பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, திமுக ஒன்றிய செயலாளர் குமரன், பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் இருந்தனர்.