மேலூர், ஜூலை 1: மேலூர் அருகே மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 7 பேரின் நினைவிடத்தில், விசிக மற்றும் மார்க். கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்காக மேலவளவில் ‘விடுதலை களம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை நடந்த ஜூன் 30ம் தேதி இங்கு கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இதன்படி, 26ம் ஆண்டு நினைவு தினமான நேற்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கட்சி கொடியேற்றி, உயிர் நீத்தோர் இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து தனியாக அமைக்கப்பட்ட மேடையில் திருமாவளவன் உரையாற்றினார். இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றலரசு, மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தாலுகா குழு செயலாளர் கண்ணன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாயி, மாவட்ட குழு உறுப்பினர்கள், இடை கமிட்டி செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.