சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், 2,839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை தொகுத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த சேகர் தரப்பில் ஆஜராகி வாதிட்டார். பெத்தேல்நகர் குடியிருப்போர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மாற்று இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்வதாக குடியிருப்போர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுசம்பந்தமாக ஆக்கிரமிப்பாளர்களின் கருத்துகளை பெற்று அரசு தெரிவிக்க வேண்டும். ஆனால், ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்க முடியாது. அப்படி வரன்முறைப்படுத்த அனுமதித்தால் அது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதைப் போன்றாகிவிடும். தற்போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்களாக இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கும், மழையில்லா காலங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கும் காரணமாகின்றன. தமிழகம் அதிக நீர்நிலைகளைக் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. இங்குதான் ஒவ்வொரு கோயிலிலும் குளங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவது கூட மறைமுகமாக ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றதாகும். நில மாபியாக்கள், ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி அரசிடம் வரன்முறை செய்து பின் ஆக்கிரமிப்பு என்று தெரிந்தவுடன் அவர்களை வெளியேற்றி விடுவதால் தான் ஏழைகள் ஏழைகளாக உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும், அது தவறாக பயன்படுத்துவதால் தான் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. தவறை அங்கீகரிக்க கூடாது என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த விவரங்களை ஆய்வு செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை 10 நாள் தள்ளிவைக்கிறோம். வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்….