மேட்டுப்பாளையம், மே 19: மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் முன்னாள் சென்ற தனியார் பேருந்து மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடக மாநிலம் பெள்ளேரி பகுதியில் இருந்து 17 பேர் கடந்த 16ம் தேதி தனியார் வாகனம் மூலம் சுற்றுலா வந்தனர். அவர்கள் உதகை, குன்னூர், கூடலூர், கோத்திகிரி பகுதிகளில் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு கோத்தகிரி வழியாக நேற்று மாலை வாகனத்தில் புறப்பட்டனர். பெள்ளேரி பகுதியை சேர்ந்த கள்ளப்பா என்பவரது மகன் விஸ்வா (20) வாகனத்தை ஓட்டினார். கோத்தகிரி சாலையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது முன்னாள் சென்ற தனியார் பேருந்து மீது எதிர்பாராத விதமாக சுற்றுலா வாகனம் மோதியது.
இந்த விபத்தில் சுற்றுலா வாகனம் ஓட்டி வந்த டிரைவர் விஸ்வா (20), வினோத் (35), உலியம்மா (50), வீரம்மா (30), வீரோவ் (13), ராம்சரண் (14), தேஜீ (11), பஸ்வராஜ் (12), பாப்பா (34), லட்சுமி (30), நாகவேந்திரா (30), நாகராஜ் (40), மனோஜ் (6), கலரம்மா (44), மகானி (12) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.