திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே 2 மூட்டை மனித எலும்புகள், மண்டை ஓடுகள், மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி சார்பில் மதுரை பைபாஸ் ரோடு பஞ்சப்பூர் அருகே மாநகராட்சி பசுமை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அப்பகுதி மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்கள் இளைப்பாறியும், வாக்கிங் சென்றும் வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்கா சுற்றுச்சுவர் அருகே மனித மண்டை ஓடுகள் மற்றும் 2 மூட்டைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடப்பதாக எ.புதூர் போலீசாருக்கு பொதுமக்கள் நேற்று தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் 2 மூட்டைகளில் மனித எலும்புகளும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுடுகாட்டில் தோண்டி எடுத்து இங்கு கொண்டு வந்து போடப்பட்டதா, இந்த செயலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பூங்கா அருகே எலும்பு கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….