பெரியகுளம் : தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்களம், அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் தொடர்ந்து மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகள் வருவாய் தரும் சாகுபடி என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிகமானோர், இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை சென்னை, திருச்சி, கோவை மற்றும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதியில்லாமல், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிலைகளை பறித்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை.இதனால், கொடியிலேயே விட்டுள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்து, சாகுபடி செய்த நிலையில், தற்போது வெற்றிலைகளை பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால், கொடியிலேயே வெற்றிலைகள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….