நாமக்கல், நவ.19: சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் தேவர்களை காத்த நிகழ்வு, கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் -மோகனூர் ரோட்டில் உள்ள முருகன் கோயிலில் நேற்று கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி பூஜையும், அதை தொடர்ந்து சக்தி ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாலதண்டாயுதபாணி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று மாலை சூரனை முருகபெருமாள் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வந்த முருகபெருமான் சூரனை வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பினர். ராசிபுரம்: ராசிபுரம் சிவன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, நேற்று காலை முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹாரம் 1 மணி நேரம் நடந்தது. ராசிபுரம் பழைய பஸ் நிலையம், பட்டணம் ரோடு, கடைவீதி, ஆத்தூர் ரோடு, நாமக்கல் ரோடு பகுதியில் சூரன், யானை, சிங்கம், ஆட்டுக்கிடா ஆகிய அவதாரங்களில் மாறி மாறி வேடமிட்டு சென்று, முருகப்பெருமானிடம் போரிடும் காட்சியை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
சிவன் கோயில் சிவாச்சாரியார் உமாபதி மற்றும் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் சூரனின் தலையைக் கொய்து கொன்றனர். இதே போல், ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயிலில் உள்ள பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.