சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டர்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும் அதில் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர் அமைச்சரவை தலைமை செயலருக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் அதனை அவர்கள் அப்போது ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நஷ்டாண்டு அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி வழக்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், முழுமையான விசாரணை நடத்தி முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர். விசாரணைக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது….