முத்துப்பேட்டை,மே11: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெரு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தொண்டியக்காடு சென்ற அரசு பேரூந்து திடீரென்று பேரூந்து நிலைதடுமாறி சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், ஓட்டுனர் உட்பட 54பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 10பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கீழப்பெருமழை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(60) சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார், இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கூறுகையில்: இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும் மிகவும் ஏழை, எளிய விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். உயிரிழந்த பெரியசாமி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கும் போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.