திருவில்லிபுத்தூர், ஜூலை 26:சிவகாசி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (60). இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறக்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (23). கூலித்தொழிலாளி. முனியாண்டிக்கும், முத்துக்குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முனியாண்டி 23.2.2020ம் தேதி தனது வீட்டில் மாடுகளிடம் பால் கறப்பதற்காக அதிகாலை நேரத்தில் சென்ற போது அங்கு மறைந்திருந்த முத்துக்குமார் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே முனியாண்டி இறந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கஜரா ஆர்ஜிஜி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.