கிருஷ்ணகிரி, ஜூலை 4: கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 11,40.42 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, தண்ணீரை திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அணையை திறந்து வைத்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையில் இருந்து, வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 75 கனஅடியும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 76 கனஅடியும் என மொத்தம் 151 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரும் நவம்பர் 9ம் தேதி வரை, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும்.
இதே போல், பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6 கனஅடி வீதம் வரும் நவம்பர் 14ம் தேதி வரை மொத்தம் 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கனஅடி வீதமும் என மொத்தம் 70 கனஅடி, 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். 4 நாட்கள் மதகை மூடி வைத்து, தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு, எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படாது. கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், மொத்தம் 11,409.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) டேவிட் டென்னிசன், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் சையத், காளிபிரியன், தாசில்தார்கள் தேன்மொழி, சம்பத், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், நகர்மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெரியமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா நாராயணன், திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், மகேந்திரன், தனசேகரன், சாந்தமூர்த்தி, சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி டேம் பிரகாஷ், கவுரப்பன், சுனில்குமார், பாலாஜி, சீனிவாசன், காங்கிரஸ் நிர்வாகிகள் அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, லலித் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.