கரூர், செப். 28: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகியவற்றின் வழியாக அமராவதி ஆறு பயணித்து, திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரியாற்றில் கலந்து திருச்சி நோக்கி செல்கிறது. இதில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் சில பகுதிகளில் மறைமுகமாக பல்வேறு கழிவுகள் கலப்பதாக பல ஆண்டுகளாகவே புகார் வந்தது. ஆனால் அவ்வப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தும் நிறுத்தினர்.
இந்நிலையில், மிகவும் குறைவான அளவில் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், சில பகுதிகளில் கலக்க விடும் கழிவுகள் காரணமாக ஆற்றின் தன்மை முற்றிலும் மாறுபடும் சுற்றுச்சூழல் பாதிக்கபடும் என கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.