நெல்லை ஆக. 15: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சாந்தி நகர் வளாகத்தில் ₹6.50 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை வளாகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சாந்தி நகரில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கேற்றினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் சாந்தி நகரில் அமைந்துள்ள வளாகத்தில் ₹6.50 கோடியில் புதிய வகுப்பறை வளாகம் பொதுப்பணித்துறை நெல்லை தொழில்நுட்ப கல்விக் கோட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வகுப்பறை வளாகத்திற்கு ‘கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதற்காக சாந்தி நகரில் நடந்த விழாவில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு குத்து விளக்கேற்றினார். விழாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன், ஞான திரவியம் எம்பி, அப்துல்வஹாப் எம்எல்ஏ, துணை மேயர் கே ஆர் ராஜு ஆகியோர் முன்னிலை வைத்தனர். துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்றார். புதிய வளாகத்தில் 12 வகுப்பறைகள், இரண்டு விருந்தினர் அறை, தலா ஒரு பதிவு அறை, அலுவலக அறை கணினி அறை, காத்திருக்கும் அறை, இயக்குனர் அறை, கருத்தரங்கு அறை, தேர்வு அறை, பணியாளர்கள் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வகுப்பறை வளாகத்தில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி ஆகிய மூன்று பாடங்கள் நடத்தப்பட உள்ளன. ஒரு பாடத்திற்கு தலா 60 மாணவர்கள் வீதம் 180 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள் நெல்லை பல்கலைக்
கழக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றனர். புதிய வகுப்பறை வளாகம் திறக்கப்ட்டதை தொடரந்து இந்த வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புதிய வகுப்பறை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் கதிரவன், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அண்ணாதுரை, பேராசிரியர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜூட் பாண்டியன், களக்காடு ஒன்றிய திமுக செயலாளர் பி சி ராஜன், விவசாய அணி கால்வாய் துரைப்பாண்டியன், இபி நடராஜன், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பதிவாளர் சாக்ரட்டீஸ் நன்றி கூறினார்.