முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் பத்து பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் திருச்சி கலெக்டருக்கு திருநங்கைகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். முசிறி பகுதியில் சுமார் பத்து திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. மனு மீது உடனடி விசாரணை மேற்கொண்ட திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் திருநங்கைகளுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து 10 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது முசிறி கோட்டாட்சியர் ராஜன், தாசில்தார் பாத்திமா சகாயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். இந்நிலையில் தங்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திருச்சி கலெக்டருக்கும் திருநங்கைகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தை சேர்ந்த ராசாத்தி, லாவண்யா சிம்ரன் உள்ளிட்ட திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.