காரைக்குடி, ஏப்.12: பங்குனி திருவிழாவை முன்னிட்டு காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியல்களில் பக்தர்கள் ரூ.16.23 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி, பங்குனி விழா கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பால்குடம் உள்பட பல்வேறு விழாக்கள் நடந்தது. பால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 28ம் தேதி வரை, 45 நாட்கள் விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 29 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிந்தன. நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ரூ.16 லட்சத்து 23 ஆயிரத்து 700 காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ், தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், சேவை குழுவினர் என 100க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.