கிணத்துக்கடவு, ஆக.13: கிணத்துக்கடவு அடுத்த சொக்கனூர் கண்ணம்மநாயக்கனூரை சேர்ந்தவர் ஆறுசாமி (48). இவர் கிணத்துக்கடவு, கல்லாபுரம் பகுதியில் பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கை நழுவி, கம்பத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே ஆறுசாமி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாயிலாக ஆறுசாமி உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.