கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து 1980 முதல் வனப்பகுதி வழியாக மின்சாரம் சப்ளையாகி வந்தது. கடந்த 1999ல் உயரழுத்த மின்கம்பி உரசியதில் காட்டுயானை இறந்ததைத்தொடர்ந்து கடந்த 2000 முதல் அணை பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. சோலார் மின் விளக்குகளும், ஒலி குறைவான ஜெனரேட்டரும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு மாற்று ஏற்பாடாக, மின்கம்பிகளை தரை வழியாக கொண்டு செல்ல ரூ.1 கோடியே 65 லட்சத்தை தமிழக பொதுப்பணித்துறை, கேரள மின்வாரியத்திற்கு கட்டியது. இப்பணி 2021 ஜனவரி இறுதியில் முடிந்தது. ஆனால் அணைக்கு வழங்கிய மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஷட்டர், அணையிலுள்ள மின்விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெறாமல் இருந்தன. தற்போது கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் பேனல் போர்டிலிருந்து, அணை பகுதியில் மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று தமிழக பொதுப்பணித்துறை மதுரை(கட்டிடப்பிரிவு) கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் முருகானந்தம் ஆய்வு செய்தனர்.அணை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், அணை பகுதியில் பருவகால நிலையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். …