இடைப்பாடி, மே 12: இடைப்பாடி அருகே, தேவூர் பஸ் நிறுத்தம் பகுதியில், அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து சாலையின் இருபுறமும், அரசு அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் கட்சி கொடி நடப்பட்டு இருந்தது. குறிப்பாக தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்புறமும் டிரான்ஸ்பார்மரையொட்டி, அதிமுக கொடி நடப்பட்டு ஒலிபெருக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம், இடைப்பாடி கா.புதூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் பிரவீன்குமார் (24) என்பவர், அதிமுக கட்சி கொடிகளை அகற்றி வந்தார். அப்போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒரத்தில் போடப்பட்டு இருந்த கட்சி கொடியை, எடுக்கும் போது டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக தேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சை அளித்து, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.