திருவள்ளூர், ஆக. 23: மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும், மூச்சுத்திணறி 5 லவ் பேர்ட்ஸ் பலியானது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பத்மாவதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், ஆவடி பகுதியில் காஸ்டெலிவரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இந்நிலையில், செந்தில்குமார் வழக்கம்போல் நேற்று க வீட்டிலிருந்து காஸ் டெலிவரி செய்வதற்காக ஆவடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதேபோன்று, அவருடைய மனைவி லட்சுமி தனது மகன்கள் இருவரையும் திருவள்ளூரில் உள்ள பள்ளிக்கு அனுப்பிவைத்து விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு திருவள்ளூர் பகுதியில் தான் வேலை செய்யும் தனியார் ஜுவல்லரி கடைக்கு சென்று இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, வீட்டின் உள்பகுதியில் இருந்து காலை 9 மணியளவில் அதிக கரும் புகை வெளியேறியது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாருக்கு போன் மூலம் தகவல் அளித்தனர். பின்னர், அவர் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் புகை மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மின்சார ஒயரை துண்டித்து பிரிட்ஜ் வெடித்து எரிந்து கொண்டிருந்ததை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களான டிவி, செல் ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கூண்டுக்குள் அடைத்து ஆசையாக வளர்த்து வந்த 5 லவ் பேர்ட்ஸ் பறவைகள் புகை மூட்டத்தால் மூச்சு திணறி உயிரிழந்தது. அதேபோன்று, அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த வெள்ளை நிற சேவல் மட்டும் மேல் மாடியில் இருந்ததால் உயிர் தப்பியது. தீ விபத்தால் ஆசையாக வீட்டில் வளர்த்த 5 லவ் பேர்ட்ஸ் பறவைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.