அய்சால்: மிசோரமில் கல் குவாரி இடிந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டம் மற்றும் டான் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டி தனியார் கல் குவாரி அமைந்துள்ளது. இந்த குவாரியில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குவாரியின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் 15 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி மூலம் கற்கள், மணலை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘உயரமான பகுதியில் இருந்து சில கற்கள் சரிந்து விழுந்ததும் எச்சரிக்கை செய்தோம். அங்கிருந்த சில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். ஆனால் சிலர் மண்ணில் புதைந்தனர்’’ என்றனர். மாநில பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் மீட்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். …