ஈரோடு, செப். 22: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குழு, தனி நபர் விளையாட்டு போட்டிகள் வட்டார குறு மைய அளவில் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் என பல்வேறு வகையான ஓட்டப்போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடக்கும். போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதேபோல் போட்டி நடுவர்களாக ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன் தலைமையில் 110 உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.