திருப்பூர், டிச. 1: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்களும் மாற்றுத்திறனாளிகளின தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.
களப்பணியாளர்கள் மூலம் பெறப்படும் தங்களது தகவல்கள் இந்த கணக்கெடுப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான செயலியில் பதிவு செய்யப்படும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பாதுகாவலர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களிடம் தயக்கமின்றி வழங்க மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி செவ்வனே நடைபெறுவதற்கு தங்களது ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.