சென்னை: மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய தேவையான வசதிகளை செய்துதர நிர்வாகம் தயாராக உள்ளதாக மெட்ரோ ரயில்வே மேலாண்மை இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உலக தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் வந்த சிறப்பு பள்ளி மாணவர்கள் 215 பேர் மற்றும் 15 தன்னார்வலர்களுடன் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் வரை சித்திக் பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் தனி அன்பு செலுத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் மட்டும் அல்ல, அவர்களின் திறன்களை, திறமைகளை வெளிக்கொண்டு வருவது சிறப்புப் பள்ளி ஆசிரியர்களும் தான். அவர்களை சக மனிதர்களுடன் பழக வைப்பதும், அவர்களுடன் மற்றவர்களை ஒன்றிணைப்பதும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் தான். இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக அரசும் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சிறப்பான தொண்டு நிறுவனங்களும், பள்ளிகளும் இருக்கிறது. மாற்றுத்திறன் கொண்டவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராக உள்ளது. இக்குழந்தைகளுடன் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….