குமாரபாளையம், ஏப்.28: குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுமார் 300 குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலுக்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது, கோயில் வளாகத்தில் இருந்த உண்டியலை காணவில்லை.
நள்ளிரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவற்றை ஏறி குதித்து, உள்ளே இருந்த உண்டியலை எடுத்து சென்றுள்ளனர். கோயிலின் வெளிப்புறம் வைத்து உண்டியலை உடைத்த நபர்கள், அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோயில் நிர்வாகி செந்தில் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திலிருந்த தடயங்களை சேகரித்தனர். உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.