ஏரல், அக். 20: தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடியதில் மாணவி வனிஷா 19 வயது பிரிவில் நீளம் தாண்டும் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியில் 2ம் இடம் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மேலும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 19 வயது பிரிவில் மாணவி ஆஷா மூன்றாம் இடமும், தொடர் ஓட்டப் போட்டியில் பள்ளி மாணவிகள் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன், தலைமை ஆசிரியர் நிர்மலா எப்சிபாய், உடற்கல்வி ஆசிரியைகள் ரெட்லின் ஷீலா, அன்ஸி சோபியா மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவிகள் பாராட்டினர்.