கும்பகோணம்: மாநில அரசு அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று அளித்த பேட்டி: கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 240டிஎம்சி காவிரி நீர் கடலில் வீணாக சென்று கலந்துள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிதி ஒதுக்கீடு செய்து மழைநீர், ஆற்றுநீர் சேமிக்கும் வழியில் நீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்தி நிலையான திட்டங்களை கொண்டு வர வேண்டும். காவிரி மற்றும் கிளை ஆறுகளில் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.நீட் தேர்வால் கடந்த சில ஆண்டுகளில் 60 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக மாணவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் கல்வியை பெற்றோர் திணிக்க கூடாது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், மாணவர்கள் எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்க கூடாது. படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. மாநில அரசு அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கல்வி என்பதை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். வருகிற 2026 பொதுத்தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாமக வியூகம் அமையும். ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்கள் தற்கொலைக்கு ஒன்றிய அரசே காரணம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டியில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் நடப்பது போன்று நீட் தேர்வு தற்கொலைகள் நடப்பதில்லை. இதற்கு ஆளுநர் என்ன பதில் சொல்ல போகிறார்?. மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வு தான். அதை ரத்து செய்யாத ஒன்றிய அரசு தான் தமிழக மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்றார்….