Sunday, June 16, 2024
Home » மாநாடு பேனர்கள் திடீர் அகற்றம் திண்டிவனத்தில் விசிகவினர் மறியல்-போராட்டம்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மாநாடு பேனர்கள் திடீர் அகற்றம் திண்டிவனத்தில் விசிகவினர் மறியல்-போராட்டம்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

by Ranjith

 

திண்டிவனம், டிச. 16: திண்டிவனத்தில் பேனர் அகற்றியதை கண்டித்து விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் வெல்லும் சனநாயகம் மாநாடு விசிக சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் மாநாட்டு பேனர் வைத்தனர். இதேபோல் திண்டிவனம்- செஞ்சி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது.

இதனை அறிந்த விசிகவினர் அப்பகுதியில் திரண்டு நகராட்சி ஊழியர்களிடம் பேனரை எதற்காக அகற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அவர்கள் சரியான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த விசிகவினர் விழுப்புரம் மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன் தலைமையில் காந்தி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சி இருப்பதால் பேனர்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, நகராட்சி வாயிற்முன் அமர்ந்து பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் நகராட்சி பொறியாளர் மற்றும் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.

அப்போது அகற்றப்பட்ட பேனரை தவிர மற்ற பேனர்கள் அகற்றப்படாது என உறுதி அளித்தனர். அப்போது விசிக மாவட்ட செயலாளர் திலீபன் கட்சியினரிடம் பேசும்போது, அரசு மற்றும் கட்சிகளின் அழுத்தம் இன்றி நகராட்சி நிர்வாகமே தலையிட்டு பேனர்களை அகற்றி உள்ளது. பேனரை அகற்றிய அதிகாரிகள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

fifteen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi