ஆத்தூர், ஜன.20: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுகவின் இளைஞரணி மாநாடு நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் பள்ளிகளிலும், அரசு பள்ளி வளாகங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கே.கே.சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றும் ராஜா(31) என்பவர், மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக, தலைவாசலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், சக போலீசாருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், போலீஸ்காரர் ராஜா திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, குடும்ப பிரச்னை காரணமாக, விஷம் குடித்து விட்டதாக ராஜா தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.