புதுக்கோட்டை: மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்து பேசினர். முன்னதாக மாநில நிர்வாகி ரங்கராஜ் வரவேற்க, மாவட்ட பொதுச்செயலாளர் முகமதலிஜின்னா நன்றி கூறினார். மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்ட ஊதியம் மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.725-ம், நகராட்சி ஊழியர்களுக்கு ரூ.610-ம், பேரூராட்சி ஊழியர்களுக்கு ரூ.533-ம் தினக்கூலியாக வழங்க வேண்டும். ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.11,848-ம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு ரூ.13,848-ம் மாத ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநிலக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.