திருப்பூர், ஏப். 18: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாண்டியன் நகர் பகுதியில் வாகன பேரணியாக சென்று கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை ( 19ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று திருப்பூர் பாண்டியன் நகரில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடந்தது.
இந்த பேரணியின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதில் வேட்பாளர் சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பேரணி பாண்டியன் நகரில் இருந்து தொடங்கிய பேரணி மாநகரின் பல்வேறு பகுதி வழியாக ராயபுரத்தில் முடிவடைந்தது. தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.