கரூர், ஜூலை 19: மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நடைபெறுகிறது என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ((https://skiltraning.tn.gov.in/DET/) என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது, காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 13ம்தேதி முதல் நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வந்து சேர்ந்து கொள்ளலாம்.
கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில தையல் தொழிற்நுட்ப பயிற்சி 8ம் வகுப்பு மற்றும் 10ம் தேர்ச்சி. 1 ஆண்டு பயிற்சி காலம் (மகளிர் மட்டும்). கணினி தொழில்நுட்ப பயிற்சி 10ம் வகுப்பு தேர்ச்சி, 1 ஆண்டு பயிற்சி காலம் (மகளிர் மட்டும்). மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர், 10ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டு பயிற்சி காலம் (இருபாலரும்). அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750. இலவச பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் அரசால் வழங்கப்படும். மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324 222111, 7538877430) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.