கோவை, செப்.5: கோவை கணபதி கணேஷ் லே அவுட் 3வது தெருவை சேர்ந்தவர் நிஜித் சிங் (42). லாரி டிரைவர். இவர் மது போதையில் அடிக்கடி தனது மனைவி பியூட்லின் ஹெலன் (38) என்பவரிடம் வாக்குவாதம் செய்து வந்தார். சமீபத்தில் நடந்த வாக்குவாதத்தின்போது நிஜித் சிங் மது போதையில் தனது மனைவியை தாக்கினார். அக்கம்பக்கத்தினர் வந்து அவரை தடுத்தனர். நேற்று முன்தினம் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பியூட்லின் ஹெலன், தனது கணவர் தினமும் மது போதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, போலீசில் புகார் அளித்துள்ளதால் விசாரணைக்கு வரவேண்டும் என தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நிஜித் சிங் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவில்லை. மனைவியின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. பியூட்லின் ஹெலன் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து தனது கணவர் வீட்டில் இருக்கிறாரா? என பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளார். பக்கத்து வீட்டுகாரர் சென்று பார்த்தபோது, நிஜித் சிங் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணைக்கு பயந்து நிஜித் சிங் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.