புதுச்சேரி, செப். 11: மாகே பெட்ரோல் பங்கில் கலெக்ஷன் பணம் ரூ.1.50 லட்சத்தை தனது நண்பரிடம் நூதனமாக கொடுத்து கடத்தியதாக ஊழியர் மீது காவல்துறை வழக்குபதிந்து விசாரித்து வருகிறது. கேரள மாநிலம் தலச்சேரி வடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (48). இவர் புதுச்சேரி மாநிலம், மாகே பிராந்தியத்துக்குட்பட்ட மய்யழி எனும் பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு உடல்நிலை பாதிக்கப்படவே ஓய்வெடுக்க வீட்டுக்கு சென்றார். கேரள மாநிலம், வயநாடு, நடவாயல் பகுதியைச் சேர்ந்த சைலன் கேசி மற்றும் அவருடன் மற்றொரு ஊழியரான வடகரை பிரகாஷ் (62) இருந்துள்ளார்.
பிரகாஷ் சாப்பிட சென்றபோது அங்கிருந்த கலெக்ஷன் தொகை ரூ.1.50 லட்சம் அடங்கிய பணப்பையை சைலனிடம் கொடுத்துச் சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, பையையும் அவரையும் காணவில்லையென கங்காதரனுக்கு போன் செய்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மேலாளரான கங்காதரன், பங்கிற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். சைலன் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. பங்க் மேலாளர் கங்காதரன் மாகே காவல் நிலையத்தில் முறையிட்டார். இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து சைலனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.