வத்திராயிருப்பு : போதிய மழை இல்லாததால் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது.வத்திராயிருப்பில் பெரியகுளம் கண்மாய் 900 ஏக்கர் வரை பாசன வசதி கொண்டது. இந்த கண்மாயில் தண்ணீர் இல்லாத நிலையிலும் விவசாயிகள் கிணற்றில் உள்ள தண்ணீரால் நெல் நடவு செய்துள்ளனர். இதேபோன்று மற்ற கண்மாய்களும் தண்ணீர் இல்லாத நிலையிலும் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து நெல் நடவு செய்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அணைகள் மற்றும் கண்மாய் நிரம்பி வழிந்தோடி வரும் நிலையில் வத்திராயிருப்பில் பெரியகுளம் கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது.தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கவில்லை. வடகிழக்கு பருவமழை மேற்குத்தொடர்ச்சி மழை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்தால் தான் அணைகளுக்கும் நீர்வரத்து வரும்.மேற்குத்தொடர்ச்சி மலையில் வரக்கூடிய தண்ணீரும் கண்மாய்களுக்கு வரும். அதே வேளையில் பிளவக்கல் பெரியாறு அணையில் தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விட உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் அணையில் உள்ள தண்ணீரோடு சேர்ந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் இருந்தால் தான் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்….