திருவாடானை,நவ.20: திருவாடானை அருகே தளிர் மருங்கூர் ஊராட்சியை சேர்ந்தது பாகனூர் கிராமம். இக்கிராமத்திற்கு திருவாடானை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தளிர் மருங்கூர் வழியாக பல ஆண்டுகளுக்கு முன்பே தார் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறத. இந்த சாலையில் தளிர் மருங்கூரில் இருந்து பாகனூர் வரை சாலை மிகவும் மோசமாக பல இடங்களில் குண்டும் குழியும் ஆக உள்ளது.
மேலும் இந்த சாலை கண்மாய் கரை அருகில் செல்கிறது. கடந்த ஆண்டு இக்கண்மாய் மாராமத்து செய்யப்பட்டது. அதனால் கரையில் போடப்பட்ட களிமண் சரிந்து சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் மழை காலங்களில் இந்த சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து பாகனூர் கிராமமக்கள் கூறுகையில், மழை காலங்களில் இந்த சாலையை கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.
கண்மாய் மண் தடுப்புச் சுவர் இல்லாததால் சாலையில் வந்து மூடி மறைத்து விட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியவில்லை. நடந்து செல்லவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து கண்மாய் கரையில் தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என்றனர்.