நீடாமங்கலம் : வடகிழக்கு பருவமழையால் ஏரிகள் உடைப்பு ஏற்பட்டால் சமாளிக்க ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் எண்கண் வெட்டாறு கதவணையில் 796 கன அடி நீர் தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு பொறியாளரிடம் நீரோட்ட அளவினை கேட்டறிந்து நீரோட்டத்தினை தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது: இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்பட்டு அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆட்சியர் நிலையில் பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக அளவிலும் கோட்ட அளவிலும் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுக்கள் மூலம் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் நிலையினை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும், 5000 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளின் நீரோட்டங்களை நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 106 மரம் அறுக்கும் இயந்திரம், 116 பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இப்புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் துறைவாரியாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஆர்டிஓ சங்கீதா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசந்திரன், தாசில்தார் நக்கீரன், நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், நீர் வளத்துறை உதவி பொறியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்….