புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ளும் வகையில் தலா ரூ.13,350 வீதம் ரூ.10,01,250 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கைபேசி 75 நபர்களுக்கும், ரூ.85 ஆயிரம் மதிப்புடைய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு நபருக்கும் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 5 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் மானியத் தொகைக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.