பெரியகுளம், ஆக. 31: மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நேற்று கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு நேற்று காலை முதலே குவிந்தனர். அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.