தேவாரம் : தேவாரம் அருகே, பண்ணைப்புரம் பகுதியில் மலையடிவாரப்பகுதியில் யானைகள் நடமாடுவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.தேவாரம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி உள்ளது. இந்த ஊர் மலையடிவாரத்தை ஒட்டிய கோட்டமலை, தீக்குண்டு மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் தென்னை, வாழை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டுள்ள 4 யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது.இதை விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மேலும், விவசாயிகளை மிரட்டும் வகையில், யானைகள் பகல் நேரங்களிலேயே மலையடிவாரத்தை ஒட்டிய நிலங்களில் முகாமிடுகின்றன. இவைகளைக் கண்டு விவசாயிகள் பீதியடைந்து விளைநிலங்களுக்கு செல்லாமல் உள்ளனர். எனவே, யானைக் கூட்டத்தை விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….