திருவையாறு, செப். 3: திருவையாறு அருகே மருவூர் ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி ஆய்வாளர் கவிதா சாந்தகுமாரி, மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தில் நாற்றங்காலில் விதை தெளிப்பதற்கு முன் ஒரு கிலோ நெல் விதையுடன் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்ளோடர்மா இருடி 4 கிராம் கலந்து ஊற வைத்து விதைநேர்த்தி செய்து தெளிக்க வேண்டும் என்றும் பஞ்சகாவ்யா, வேப்ப எண்ணெய் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.