நன்றி குங்குமம் தோழி தொழில் ஆரம்பிக்க… மருத்துவச்செலவு… குழந்தைகளின் படிப்பு செலவு… இது போன்ற அத்தியாவசிய செலவினை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த செலவுகளை சமாளிப்பது என்பது கொஞ்சம் கடினம். அவர்கள் கடன் வாங்கியோ அல்லது வங்கியில் பர்சனல் லோன் எடுத்தோதான் அந்த செலவினை சரி செய்கிறார்கள். இவர்களின் பிரச்னை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது தான் ‘மிலாப்’, கிரவுட் பண்டிங் பிளாட்பார்ம். இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன் இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி விவரித்தார்.‘‘நாங்க ஒரு கிரவுட் பண்டிங் அமைப்பு. அதாவது ஒருவரின் நிதிப் பற்றாக்குறையினை பலரிடம் உதவிக் கேட்டு அதற்கான உதவியினை செய்வது. இந்த நிறுவனம் துவங்கி 12 வருடங்களாகிறது. ஆரம்பத்தில் மருத்துவ செலவிற்காக மட்டுமே நிதி உதவிகளை செய்து வந்தோம். தற்போது சிறுதொழில் துவங்க, படிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு என பல தரப்பட்டவர்களுக்கு நிதி சார்ந்த உதவியினை செய்து வருகிறோம். பொதுவாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அறையின் வாடகை, சிகிச்சை என பல லட்சங்கள் செலவு ெசய்ய வேண்டும். இந்த செலவினை கட்டுப்படுத்த பலர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை எடுத்துள்ளார்கள். ஆனால் அதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே எடுக்க முடியும். கேன்சர் சிகிச்சை, உறுப்பு மாற்று அல்லது விபத்து போன்ற நேரத்தில் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் எங்களின் கிரவுட் பண்டிங் திட்டம் கைகொடுக்கும். குறிப்பாக கோவிட் காலத்திற்கு பிறகு இதற்கான விழிப்புணர்வு அதிகமாயிடுச்சுன்னு சொல்லலாம்’’ என்றவர் அந்த திட்டத்தைப் பற்றி முழுமையாக விவரித்தார்.‘‘எங்களின் நோக்கம் ஒருவருக்கு வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பது. ஆனால் அதையே பலர் தவறாகவும் பயன்படுத்த ஆரம்பிப்பது தான் வருத்தமாக இருக்கிறது. ஒரு பிரச்னை என்று சொன்னால்… உடனடியாக எங்களின் அமைப்பு மூலம் எளிதாக பணம் திரட்ட முடியும் என்று நினைத்து பலர் ஏமாற்றவும் செய்வார்கள். இதனால் எங்க மேல் ஒரு அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தான் நாங்க இதில் பல விதிமுறைகளை அமைத்திருக்கிறோம். சிகிச்சைக்காக நிதி கோருபவர்கள் என்றால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்களா என்பது குறித்து எங்க குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். 2500க்கும் மேற்பட்ட மருத்துவமனையுடன் தொடர்பு வைத்திருப்பதால், அந்த மருத்துவமனையில் நாங்க தனிப்பட்ட குழு அமைத்து இயங்கி வருகிறோம். மேலும் உதவி செய்பவரை மனதில் கொண்டு நாங்க டோனர் கியாரண்டி என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். அதாவது தேவையான நிதி அந்த குறிப்பிட்ட நபருக்கு நேரடியாக போய் சேரும் என்பதற்கு நாங்க உத்திரவாதம் தருகிறோம். இல்லாத பட்சத்தில் உதவி செய்தவரின் தொகை திருப்பி தரப்படும். இதன் மூலம் இந்த திட்டத்தின் மேல் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதில் மருத்துவ செலவிற்காக மட்டுமில்லாமல் சுயதொழில் செய்பவர்கள், இன்ப்ளூவன்சர்கள், சிறுதொழிலில் ஈடுபடுபவர்கள் என பலர் தங்களின் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இவர்களுக்காகவே மிலாப் 360 என்ற மற்ெறாரு திட்டத்தினை துவங்கி இருக்கிறோம். இந்த திட்டம் இணையம் மற்றும் செல்போன் ஆப் என இரு வழியாகவும் செயல்படுகிறது. அதில் அவர்களின் தேவை என்ன என்று விளக்க வேண்டும். அதன் பிறகு அதனை எங்க குழு பரிசீலனை செய்து, இணையம் மற்றும் சோஷியல் மீடியா மூலமாக விவரங்களை வெளியிடுவோம். மேலும் நாங்க கடந்த 12 வருடமாக செயல்பட்டு வருவதால், எங்களின் ஸ்பான்சர்கள் அவர்களால் முடிந்த உதவியினை செய்ய முன்வருவார்கள். நிதியினை எங்க அமைப்பு நேரடியாக பெறாது. அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பதால், எல்லாவற்றுக்கும் சரியான பதிவு இருக்கும். மேலும் இதற்கு என தனி வங்கிக் கணக்கு இருப்பதால், அதன் மூலம் யாருக்கு எதற்காக என்ன தொகை வழங்கினோம் என்பதை நம்மால் எதிர்காலத்தில் கூட கணக்கிட முடியும். மேலும் குறிப்பிட்ட நபருக்கான தொகை மருத்துவமனைக்கோ அல்லது கல்வி நிறுவனத்திற்கோ நேரடியாக வழங்கப்படும். அவ்வாறு நிதி வழங்கும் முன் உதவி வேண்டுபவரின் முழு ஆதாரங்களை சேகரிப்போம். மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நாங்க அவங்க மாத வருமானம் பார்த்து உதவி செய்வதில்லை.காரணம் நடுத்தர வர்க்கம் அல்லது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்தாலும் அவங்களால் 20 லட்ச ரூபாய் ஒரு சிகிச்சைக்காக செலவு செய்ய முடியாது. அதனால் அவர்கள் சரியான விவரங்களை எங்களுக்கு கொடுத்தால் அதனை நாங்க ஆய்வு செய்து உதவி செய்ய முன்வருவோம். தற்போது இந்தாண்டு மூணு விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். மருத்துவ சிகிச்சை மட்டுமில்லாமல், தொழில் துவங்க மற்றும் படிப்பு செலவிற்கு என நிறைய கோரிக்கைகள் வருவதால், அவங்க மிலாப் 360 மூலமாக பயன் பெறும் போது, உதவி செய்தவர்களுக்கு பெற்றவர்கள் அவர்களால் முடிந்ததை செய்யலாம். உதாரணத்திற்கு ஒருவர் சிறுதொழில் செய்ய நிதி திரட்டும் போது, அவங்க நிதி வழங்கியவர்களுக்கு தாங்கள் தயாரிக்கும் பொருட்களை ஒரு டிஸ்கவுன்ட் விலையில் கொடுக்கலாம். இதனால் இருவருமே பலன் அடைவார்கள். இரண்டாவது மிலாப் கிரவுட் பண்டிங்கில் தனி நபர்கள் அதிகமா உதவி செய்வதால், நாங்க அவர்களின் 50% தேவையினை மட்டுமே பூர்த்தி செய்து வந்தோம். அதாவது ஒரு சிகிச்சைக்கு 10 லட்ச ரூபாய் என்றால், அதில் 5 லட்சம் நாங்க நிதி திரட்டி தருவோம். மற்ற 5 லட்ச ரூபாயினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ளணும். இது எல்லாராலும் முடியாத காரணத்தால், இதனை சி.எஸ்.ஆர் திட்டத்துடன் இணைத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவினை குறைத்து தருகிறோம். பொதுவாக திரட்டப்படும் நிதி ஒரு வங்கி கணக்கில் சேரும். அப்படி இல்லாமல் ஆப் மூலமாகவும் நிதியினை நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இதனால் குறைந்தபட்சமாக பத்து ரூபாய் என்று ஒருவர் தினமும் இந்த ஆப் வழியாக உதவி செய்யலாம்’’ என்றார் அனோஜ்.தொகுப்பு: ஷன்மதிபடங்கள்: ஜி.சிவக்குமார்…