கடத்தூர்:தர்மபுரி மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல நூறு ஏக்கர் பரப்பில், மரவள்ளிகிழங்கு பயிர் செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக வெள்ளை பூச்சி தாக்குதல் மற்றும் இலை கருகல் நோயால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதிகாரிகளின் போதிய ஆலோசனை இல்லாத நிலையில், தென்கரைக்கோட்டை சிந்தல்தல்பாடி, குருபரஅள்ளி, தாதனூர், ஐயம்பட்டி, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டிருந்த மரவள்ளி செடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து குருபரஅள்ளியைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ‘கடந்த மாதங்களில் போதிய மழை இல்லாமல், மரவள்ளி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்து, செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது மழை பெய்ததால் செடியில் புதிய குருத்துகள் முளைக்கின்றன. இப்பகுதியில் விவசாயிகளுக்கு அதிகாரிகள் கிழங்கில் மகசூலை அதிகரிக்கவும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்துகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றார்.