வேப்பூர், ஏப். 30: விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அறிவழகன் (47). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த 27ம் தேதி செல்போன் திருடியதாக குப்பநத்தம் புறவழிச்சாலை அருகே மர்மகும்பல் கடுமையாக தாக்கியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விருத்தாசலம் போலீசார் பல்வேறு தடயங்கள் மூலம் அறிவழகனை தாக்கிய கொலை செய்த மர்மநபர்கள் குறித்து மேற்கொண்ட விசாரணையில் விருத்தாசலம் குப்பநத்தம் பகுதியை சேர்ந்த கோபாலின் செல்போனை அறிவழகன் திருடியதாக கூறி கோபால் மற்றும் அவரது நண்பர்கள் திருவரசன், அமீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அறிவழகனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விருத்தாசலம் போலீசார் குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் கோபால் (22), திருமூர்த்தி மகன் திருவரசன் (21), செந்தில் மகன் செந்தமிழ்செல்வன் (21), அலாவுதீன் மகன் அமீர் பாஷா (20) ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.