திருச்சி: திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில். மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் வாழ்க அண்ணல் காந்தியின் புகழ் என்ற முழக்கத்துடன் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் தூர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், சேர்மன் துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.