Monday, May 27, 2024
Home » மது போதை தகராறில் நண்பனை அடித்து கொன்று உடலை படகு ஐஸ் பெட்டியில் வைத்த மீனவர்

மது போதை தகராறில் நண்பனை அடித்து கொன்று உடலை படகு ஐஸ் பெட்டியில் வைத்த மீனவர்

by Karthik Yash

தண்டையார்பேட்டை, மே 7: புது வண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வேலு (47). இவர் , காசிமேட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் , திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இருவரும் நண்பர்கள். கடந்த 27ம் தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர், ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்று திரும்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளனர். அப்போது, சகாயத்திற்கும், வேலுவுக்கும் போதை தலைக்கு ஏறியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஆதரவாக பரசுராமன் பேசியுள்ளார். பின்னர், காசிமேடு நாகூரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்துள்ளார்.

அங்கு வந்த பரசுராமனிடம், ‘‘எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய்,’’ என கேட்டு வேலு தகராறு செய்துள்ளார். அப்போது போதையில் இருந்த பரசுராமன், ஆத்திரமடைந்து வேலுவின் கழுத்தில் தாக்கியுள்ளார். தொடர்ந்து காலால் எட்டி உதைத்துள்ளார். இதில், கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பரசுராமன், யாரும் பார்ப்பதற்குள் உடனடியாக வேலுவின் உடலை தூக்கிச் சென்று, இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் உடலை கொண்டு போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இதைப்பார்த்த காசிமேடு பகுதியை சேர்ந்த வீரப்பன் (52) என்பவர், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வேலுவின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து பரசுராமனை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi