சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர், சூளை பள்ளம், வெங்கட்ராமன் சாலையை சேர்ந்தவர் செல்வம் (48). ஜாபர்கான்பேட்டையில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர், தனது மகன் பிரகாஷ் (20) மற்றும் மனைவி உமாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பெயின்டிங் வேலை செய்து வந்த பிரகாஷ், மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்று வந்தாலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதை அவரது தந்தை செல்வம் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், பிரகாஷ் திருந்தாததால், அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால், பிரகாஷ் தனது நண்பர்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தாயாரை பார்ப்பதற்காக, பிரகாஷ் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் இருந்த மகனை, வீட்டிற்குள் அனுமதிக்காமல் செல்வம் தகராறில் ஈடுபட்டு, அடித்துள்ளார். அப்போது பிரகாஷ், என்னையே அடிக்கிறீயா… என்றபடி கையில் வைத்திருந்த கத்தியால் தந்தையை குத்தியுள்ளார். இதில், செல்வம் அலறி துடித்துள்ளார். மேலும், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். ஆனாலும் பிரகாஷ், தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், போதையில் இருந்த பிரகாஷை மடக்கி பிடித்து, கடுமையாக தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர்.நகர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து பிரகாஷை மீட்டனர். பின்னர், செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். குடி பழக்கத்தை கண்டித்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை கொலை செய்த பிரகாஷை பொதுமக்கள் பிடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
மது குடிப்பதை கண்டித்ததால் ஆத்திரம் தந்தையை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்த மகன்: மக்கள் சுற்றிவளைத்து தாக்கினர்; எம்ஜிஆர் நகரில் பரபரப்பு
previous post