போடி, செப். 6: போடியில் மதுவாங்கி தர மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர். போடி குலாலர்பாளையம் போஜராஜ் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் பாண்டி (50). கூலித்தொழிலாளியான இவர், தனது நண்பர்களுடன் தேவர் காலனி தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, போடி குலாலர்பாளையம் வாட்டர் டேங்க் பகுதியில் வசித்து வரும் மணி (81) என்பவர் அங்கு வந்தார். பின்னர் பாண்டியிடம் மது வாங்கி தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
அவர் வாங்கி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மணி மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டியை கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின் பேரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முதியவர் மணியை கைது செய்தனர்.