மதுரை, ஜூன் 10: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் உந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான காமராஜர்புரம், பாலரெங்காபுரம், பழைய குயவர்பாளையம் ரோடு, இந்திரா நகர் சி.எம்.ஆர்.ரோடு, கீழ் மதுரை ஸ்டேஷன் ரோடு, என்.எம்.ஆர்.புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் சென்றடைவதில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்தது. அதனை சரிசெய்யும் வகையில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புது ராமநாதபுரம்ரோடு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி அருகில் புதிய கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய அளவிலான குழாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கழிவுநீர் உந்து நிலையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர் மயிலேறிநாதன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், செய்யது அபுதாகீர், செல்வி, தமிழ்செல்வி, பிரேமா, லோகமணி உள்பட பலர் பங்கேற்றனர்.